Wednesday 16 April 2014

மாற்றான் தோட்டத்து மாங்காய்

"மண்ணுடன் மனிதனுக்கு இருந்த தொப்புள் கொடி உறவு அறுபட்டு விட்டது" என்று எழுத்தாளர் எஸ்.ரா குறிப்பிட்டதைப் பற்றி , நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.விடுமுறையில் , வண்ணத்துப்பூச்சிக்கு அலைந்தது, மாடியில் காயும் நெல்லைக் கொத்த வந்த குருவியைப் பிடிக்கப் போட்ட மாஸ்டர் பிளான்,பண்டிகையில் கடலை மிட்டாய் விற்று தொழிலதிபர் ஆனது என நீண்டு கொண்டே சென்ற உரையாடலில் நண்பன் ஞாபகப் படுத்திய கதை இது.

எங்கள் ஊரின் மிகப் பெரிய, புராதான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.எனக்கு நண்பர்கள் என மிகப் பெரிய "வானரப் படை" யே உண்டு. அந்தப் படையில் அடக்கி வாசிப்பவன் நான் தான். அப்பா என்ற ஆளுமையின் நன்மதிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இல்லாவிட்டாலும்,அவர்களின் கோபத்திலும்,கண்டிப்பிலும் இன்னுமே எனக்கு ஒரு கிலி உண்டு. இன்றைய  ஆம் ஆத்மியின் சின்னத்தைக் கொண்டு , அன்றே என்னைச் சுத்திகரித்த நிகழ்ச்சிகள் உண்டு.இதில் கொஞ்சம் படிக்கக் கூடியவன் என்று ,ஆசிரியர்களால் குறிக்கப்பட்டவனாதலால் , ஏதாவது தவறு செய்தால் "யூ டு புரூட்டஸ்" என்ற கேள்விகளால், துளைத்தெடுக்கப்பட்டு தர்ம சங்கடங்களுக்கு ஆளாவதை விரும்பாத காரணத்தினாலும், "ஊமைக் குசும்பு" மட்டுமே பண்ணிக் கொண்டு இருந்தேன்.

அப்படித் தான் ஒரு நாள் மதிய உணவுக்குப்பின், நண்பன் பள்ளியை ஒட்டிய மாந்தோப்பைப் போய் பார்த்து வரலாம் என்றான். அது " என்னை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை "என்பது என் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை.நான்கு உயிர்(எடுக்கும்) நண்பர்களுடன் சென்றோம்.பள்ளிக்கு மிக அருகில் ,முட்டிக்கால் உயரமே உள்ள  மண் சுவர் தடுப்பு.தாண்டிப் போவதில் சங்கடம் எதுவுமில்லை.மிக அடர்த்தியான , மரங்கள்.அந்த மாவிலைகளின் மணம் நாசிக்கும், பழுத்துத் தொங்கும் மாங்கனிகள் கண்ணுக்கும் விருந்தளிக்க , போதி மரம் என்பது மாமரமாகத் தான் இருக்க வேண்டும் என நான் கற்பனையைத் தட்டி விட, "நோ மோர் சில்லி ஃபீலிங்ஸ்" என்று என்னை நினைவுலகத்திற்கு கொண்டு வந்து, நண்பன் ஆட்ட யுக்தி(game plan) யை விளக்கத் தொடங்கினான்.மிக வேகமாக ஓடக் கூடிய ஒருவன் தோப்பின் நுழைவாயிலுக்கு அருகில், மரத்திற்கு கீழ் ஒருவன், வேகமாக , ஏற இறங்கத் தெரிந்த நான்( முன்பொரு நாள் ,புளிய மரத்திலிருந்து கீழே விழுந்து கையை உடைத்து, "வ வ்வால் கை" என்று , இன்றும் அன்புடன் அழைக்கப்படும் தகுதியும் உண்டு) . நான் ஒரு முறை மரத்தை நோட்டமிட்டு, " லோ ஹேங்கிங் ஃபுரூட்ஸ்"  ஐ , குறித்துக் கொண்டு மின்னல் என ஏறினேன். 

கண்ணிமைக்கும் நேரத்தில் , ஆளுக்கு ஒன்று என ஐந்து மாங்காய்கள் மண்ணைத் தொட, கீழே நின்றவன் எடுத்து ருசி பார்க்க( தரக் கட்டுப்பாடு) , சுவையில் ஆளும் தருணத்தில் " ஓடுங்கடா" சத்தம். கடைசியாகப் பறித்த மாங்காய் கையுடன் நான் ஓட ஆரம்பித்து விட்டேன். திரும்பிப் பார்க்கும் போது நண்பன் , காவலாளியின் மேல் கையில் வைத்திருந்த மாங்காய்களை வீசி எறிந்து அவரை நிலை குலையச் செய்து விட்டு, ஓடி விட்டான். நான் நேராக என் வகுப்புக்கே வந்து(புதுத் திருடன்), கையில் மாங்காய் இருப்பதை உணர்ந்து, ஒரு கடி கடித்து விட்டு, வகுப்பாசிரியரின் மகனின் தூக்குச்சட்டி ( டிபன் பாக்ஸ்) யில் போட்டு , மூடி வைத்து விட்டு(குயுக்தி) , வெளியே வரவும், ஒரு சிறுவன் அந்த காவலாளியை வகுப்புக்குள் கூட்டிச் செல்கிறான். அப்பாடா! தப்பித்தோம் என பெருமூச்சு விட,அந்த பள்ளியில் படிக்கும் என் அண்ணன் வேகமாக வந்து என் கன்னத்தைத் தட்டி, ஒட்டியிருந்த மாங்காயின் துணுக்குகளை மறைத்தார்.என்னை முறைத்தார்.

அடுத்த நாள் அசெம்பிளியில், பேச்சாளரான எனது வகுப்பாசிரியர் " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணா.நம் மாணவர்கள் , ஒரு படி அதிகமாக மாற்றான் தோட்டத்து மாங்காய்க்கும் ருசி உண்டு, என்று அத்துமீறி பக்கத்து தோட்டத்தில் நுழைந்து கைவரிசையைக் காண்பித்து  உள்ளனர். ..." 

இன்று வரை அந்த திருடனைக் கண்டுபிடிக்கவே இல்லை அவர்கள்.


No comments:

Post a Comment