Saturday 25 January 2014

நன்றி

வீட்டுக் கடன் வங்கிக் கணக்கை ,  வட்டி குறைந்த மற்றொரு வங்கிக்கு  மாற்ற ஆசை தான். நான் மலைத்தது , அவர்கள் கேட்ட ஆவணங்களைக் சேகரிக்க எடுக்க வேண்டிய முனைப்ப, நேரம். ஆனாலும் ஆதாயம் கருதி சம்மதித்தேன்.எல்லா வேலையும் முடிந்தது எனக் கருதிய வேளையில் , எனது சொந்த ஊரில் என. பெயரில் உள்ள , ஒரு வங்கிக் கணக்கின்  ஆண்டு அறிக்கை வேண்டும் என்றார்கள்.அந்த வங்கியின் இணையக் கடவுச் சொல்லை தொலைத்திருந்தேன். வேறு கடவுச் சொல்லுக்காக தொடர்பு கொண்டதில் , ஒரு வாரம் ஆகும் என்றனர்.நுகர்வோர் சேவை மையம் வங்கியின் சென்னை கிளையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.

சென்னைக் கிளையில் , என்னை ஒரு அற்பப் புழுவைப் போல பார்த்தனர். முடியாது, நீங்கள் எங்கு கணக்கு வைத்திருக்கிறீர்களோ , அங்கு தான் செல்ல வேண்டும், இல்லை கடிதம் எழுதுங்கள்(இந்தக் காலத்தில், இப்படியும்) , அவர்கள் அனுப்பி வைப்பார்கள் என்றனர்.நம்பிக்கை இழந்தவனாக , எதற்கும் கேட்டு வைப்போம் என்று அலைபேசியில், அந்த கிளையிலிருந்தே எனது சொந்த ஊர் வங்கியைத் தொடர்பு கொண்டேன். மறுமுனையில் மிக அக்கறையோடு என் தேவையைக் கேட்டார், மேலாளர் என்று நினைக்கிறேன், எனது நிலையை விளக்கி , அதன் அவசரம் குறித்தும் கூறினேன்.என்னுடைய கணக்கு எண் போன்ற விவரங்களை வாங்கிக் கொண்டவர்,உடனடியாக ஒரு கோப்பு எண்ணைக் கொடுத்தார். சென்னை வங்கியின் மேலாளரிடம் கொடுங்கள், அவரால் இந்த எண்ணை வைத்து உங்கள் அறிக்கையை , தரவிறக்கம் செய்து தர முடியும், ஒரு வேளை முடியவில்லை என்றால் திரும்ப அழையுங்கள் என்றார்.நன்றி கூறி , அவ்வாறே செய்தேன்.எனக்கு வேண்டிய அறிக்கை , அரை மணி நேரச் செலவில் கையில் கிடைத்த திருப்தியுடன், என் பணிகளில் மூழ்கி விட்டேன். 

ஒரு வாரம் கழித்து , மீண்டும் ஒரு தேவையில் , எனது ஊர் வங்கி மேலாளரை அலைபேசியில் அழைத்தேன்.யாரெனச் சொன்னதும், "  அன்று உங்கள் வேலை முடிந்ததும், என்னைத் திரும்ப அழைப்பீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் நீங்கள் கண்டு கொள்ளவில்லையே?" என்றார். திடுக்கிட்டேன் ஆம் அழைக்கவில்லை தான், எந்த அளவுக்கு சுயநலத்துடன் இருக்கிறோம் என்பதோடு  உதவும் மனம் கொண்ட ஒருவருக்கு, இதை மாதிரியான செயல்கள் என்ன எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் தான் என்னை வெக்கித் தலை குனிய வைத்தது.இதை உணர வைத்த அந்த வங்கி மேலாளருக்கு என் மனப்பூர்வ நன்றிகள் இரண்டாவது முறையாய்...