Tuesday 1 October 2013

மாலை நோய்

ஏன்ப்பா சபா, லட்சுமி மேடம் இன்னைக்கு லீவா? ஆமா சார் , வயிற்றுப் போக்குன்னு போன் பண்ணினாங்க. "ம்..இனி என்ன போக்குன்னாலும் எனக்கு போன் பண்ணனும்னு சொல்லு அந்தம்மாட்ட" இதைக் கேட்டதும் சத்தமாகச் சிரித்தான் விற்பனைப் பிரதிநிதி. சிரிக்க என்ன இருக்கிறதென்று சபாவிற்கு தெரியவில்லை. சபாவிற்கு தாயும்,மணமாகாத தங்கையும் இருக்கிறார்கள்.சொன்னவனுக்கும்,சிரித்தவனுக்கும் ஒரு பெண் உறவு இருக்கத் தானே செய்யும் என்று நினைத்தான்.

அந்த அலுவலகத்தில், ஆல் இன் ஆல் சபா தான்.காலை அத்தனை பேர் சேர்,டேபிளை துடைத்து, கோப்புகளை அடுக்கி வைத்து, நேரத்திற்கு டீ,காபி,டிபன்,அச்செடுக்க,வங்கிக்கு செல்ல, சில கஷ்டமர்களிடம் கோப்புக்களை கொண்டு சேர்ப்பது என்று.மாதம் 4000 சம்பளம்.தேவைக்கு அதிகமாகப் பேசுவது,எதற்கெடுத்தாலும் டிப்ஸ் எதிர்பார்ப்பது என்ற வழக்கமான குணங்கள் இல்லாத , பிழைக்கத் தெரியாத பிறவி.

புற நகரில் ,வரிசையாக கட்டப்பட்ட வீடுகள்.மனிதர்கள் தான் வாழ்கிறார்கள் என்பதை உறுதி செய்ய , முடிந்த மட்டும் கொட்டப்பட்ட குப்பைகள் தெருவெங்கும், சில கோழிகள், பன்றிகள், மாட்டுச்சாணம்,  சாக்கடை.குறுக்கும் நெடுக்குமாய் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.வாடகை ரூபாய் 800, ஒரு அறை உள்ள வீடு. சபா இங்கிருந்து நடந்தே அலுவலகம் சென்று விடுவான்.அதிகப்படியான ஆசைகள் பட முடியாத வருமானம்.அவனுக்கோ, தங்கைக்கோ திருமணம் பற்றிய கனவு மட்டுமே இருந்தது.

இன்று சேப்பாக்கத்தில்,  பார்சலை ஒப்படைத்து விட்டு , வீட்டிற்கு செல்ல வேண்டும். கேஷியரிடம் , காசு வாங்கச் சென்றான்.அவர், "சபா, ஆடிட்டர் பெண் , கிளி மாதிரி இருப்பா,உங்க வகையறா தான், உனக்கு பேசி முடிச்சிடலாமா?" என்று சிரித்தார்.அவன் பதில் சொல்லவில்லை.அவரும் எதிர்பார்க்கவில்லை.ஷேர் ஆட்டோ பிடித்து, அந்த வீட்டு போர்டிகோவில் , நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சிரமத்துடன் கடந்து , அழைப்பு மணியை அழுத்தினான்.காத்திருந்தான். கிளி கதவு திறந்து எட்டிப் பார்த்தது.கிரில் வழியே பார்சலை வாங்கியது.நன்றி சொல்லி மறைந்தது.திரும்பும் போது,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியின் கண்ணாடியில் தன் முகத்தை,நரைக்கத் தொடங்கியுள்ள  மீசையைப் பார்த்துக் கொண்டு, சிறிதாகப் புன்னகைத்து கடந்தான்.ஏதோ நடக்க வேண்டும் போல தோன்றியது. சில்லென்ற காற்று , கடலின் அண்மையை நினைவூட்ட, நடந்தே கடற்கரைக்கு சென்றான்.எங்கும் மனிதர்கள்,சந்தோஷமாக,சோகமாக,தூங்கிக் கொண்டு,நடந்து கொண்டு , அமர்ந்து கொண்டு.

இருட்டி விட்டிருந்தது.ஓரிடத்தில் அமர்ந்து , சுற்றிலும் நோட்டமிட்டான் .பக்கத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.வயதொன்றும் அதிகமில்லை.ஆனால் அங்கங்கள் பெரிதாக,மேலும் பெரிதாக்கிக் காட்டும் ஒப்பனை.என்ன வேண்டும் என்பதாய் தலை ஆட்டினாள். அது எவ்வளவு தருவாய் என்ற தோரணையில் இருந்தது. வேகமாகத் தலையாட்டி, திரும்பி,எழுந்து கொண்டான்.சிறிது புழுக்கமாக இருந்தது.நிறுத்தத்தில் கை காட்டி, ஷேர் ஆட்டோவில் ஏறினான்.அதிக கூட்டமாக இருந்தது.இவன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்,இவனுடன் ஒட்டி இருந்ததை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்,யாரோடோ கைபேசியில் கொஞ்சிக் கொண்டிருந்தாள். "பொறுக்கிடா   நீ ,ரஎப்படித் தெரியும்".காதுகளுக்கு மூடி இல்லை என நினைத்துக் கொண்டான்.புழுக்கம் அதிகமாகியது. முந்திய நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான்.

வருடத்திற்கு ஓரிரு முறை மது அருந்துவான்.இன்று தேவையாகப்பட்டது. கடையில் 100 ரூபாய் கொடுத்து, பிராந்தி 75 Rs. என்று, மிச்சத்தை எண்ணி வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான். மிகுந்த குப்பைகளிடையே , உரக்கப் பேசிக் கொண்டு  சந்தோஷமாக மனிதர்கள். சபா ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கிக் கொண்டு ,   மிக ஓரமான ஒரு டேபிளில் அமர்ந்தான். ஏற்கனவே அந்த டேபிளில் இருந்த காலியான குப்பியை சிறிது நீர் ஊற்றிக் கழுவி, இரண்டு குப்பிகளிலும் சரி பாதியாக ஊற்றி, தண்ணீரால் நிரப்பிக் கொண்டான். ஒரு குப்பியை எடுத்து, ஒரே மூச்சில் மூச்சு விடாது விழுங்கினான்.

அப்போது, ஒரு பெண் அவனருகில் வந்து, "எதுனா தா"  என்றாள். ஆண் குரல். பெண்ணுக்கான எல்லா நளினமும் இருந்தது.அக்கறையான அலங்காரம்.தலையில் பூ  வைத்திருந்தாள்."பெயர் என்ன?"."கமலா". "என் பக்கத்தில் உக்காரு, கமலா" என்றான்.5  ரூபா தா, வாட்டர் பாக்கட் வாங்கியாரேன்". அவள் கையிலும் மதுக் குப்பி. ரூபாய் எடுத்துக் கொடுத்தான். வந்தமர்ந்தாள்.இவனுக்கு வியர்த்தது.அவள் சூடியிருந்த பூ என்னவோ செய்தது.பெண்களின் தலையிலிருக்கும் போது, மலரின் மணம் ஒரு போதை.அடுத்த குப்பியையும் அருந்தினான்.மின்சாரம் நின்று விட்டது. எங்கும் இருள்.அவளருகில் இன்னும் நெருங்கினான்."அவ்வளவு பிடிக்குமா?" என்றாள். "ஆமா"  எனும் போது இவன் மடியில் அவள் கை ஊர்ந்தது.இவன் தடுக்கவில்லை.புத வித போதை.அரை மயக்கம்.கிளி பறந்து வந்து மடியில் அமர்ந்தது.பெரிய அங்கப் பெண் , உதடு குவித்தாள். ஆட்டோக்காரி, "ஆமா, கருப்பு கலர் தாண்டா" என்றாள் கண்கள் தாழ்த்தி.மூச்சு ஏகத்திற்கும் வாங்கியது.மயக்கம் வந்தது.மின்சாரம் வந்த போது, திடுக்கிட்டு விழித்தான். தெளிந்து இருந்தது.

வீட்டுக்கு போகும் போது, தனக்குள் நினைத்துக் கொண்டான், தங்கைக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும்.