Sunday 24 November 2013

நண்பன்டா...

தொடர்ந்த வேலை தந்த அயர்ச்சியில் இருந்தவன், கல்லூரி கால நண்பன் பாபுவின் தொலைபேசி அழைப்பைக் கேட்டதும் சிறிது மலர்ந்தேன்.25 வருட கால நண்பன்,சிரிக்க ,சிரிக்கப் பேசுபவன்.தொழில் விஷயமாய் சென்னைக்கு வருகிறான். மாலை ஐந்து மணிக்குப் பார்க்கலாம் என்று முடிவாகியது.அவனை நேரில் பார்த்து வெகு காலமாகி விட்டது.எண்ணங்கள் உற்சாக ஊற்றாக ,கல்லூரி கால வாழ்வை அசை போடத் தொடங்கியது.

அந்த கல்லூரியோ,விடுதியோ ஒரு மாணவன் வாழ்க்கைக்கு இணக்கமான சூழ்நிலையைக் கொண்டிருக்கவில்லை. ஒரு விடுமுறை நாளில், அவன் மீசையை சவரம் செய்யும் ஒரு ரத்தக்களரியான போராட்டத்தில் தான்  முதலில் அவனைக் கண்டேன்.அருகில் சென்று , "உதவட்டுமா?" என்றேன். என் மீசையின் அடர்த்தியைப் பார்த்து புரிந்து கொண்டான்,எனக்கு முன் அனுபவம் இருக்கிறது என்று.இப்படியாக ஆரம்பித்த நட்பு, ஒரு நேரத்தில் விடுதி வாழ்க்கையின் அடக்குமுறையை சகிக்க முடியாது , வீட்டிலும், கல்லூரி முதல்வரிடமும் தகுந்த பொய்யைச் சொல்லி, விடுதி விட்டு வெளியே வந்தோம் சீனியர் ஒருவரின் வழி காட்டலில் , வீடும் இல்லாது , ஹோட்டலும் இல்லாது , திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் போன்று, கீழே கடைகளும் , மேலே வரிசையாக ஒரு அறை வீடுகளும், இரண்டு முனைகளிலும் கழிவறைகளையும் கொண்ட இடத்தில் , ஒரு அறையில் தஞ்சமடைந்தோம்.

கீழே கடையில் உள்ளோரோ, மற்ற சுற்றுப்புறத்தாரோ எங்களை விரோதிகளைப் போலவும்,அவர் தம் பெண்டிரை எங்கே நாங்கள் கவர்நது விடுவோமோ என்பது போலத்தான் பார்ப்பார்கள்.அதைப் புறக்கணித்து , எங்கள் வேலையை, சந்தோஷங்களை எந்தப் பழுதில்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் திறன் இருந்தது எங்களிடம்.அந்த ஊரைச் சேர்ந்த நண்பனின் உதவியுடன் ,  டிவி, டெக் வாடகைக்கு எடுத்து படங்கள் பார்த்து எங்கள் கலை மற்றும் இளமை தாகங்களைத் தீர்ப்பதற்கு நாங்கள் மிகவும் பாடுபட்டிருக்கிறோம்.எப்போதாவது தாக சாந்தி தீர்த்து, அறையை அடுத்த நாள் கழுவி விட்டு சாம்பிராணி போட்டு மணக்க வைக்க முயற்சித்திருக்கிறோம்.இப்படியாக , இனிமையாக கழிந்து கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையை , அதன் ஒழுங்கு முறையைக் கலைத்துப் போட்டவர் கண்ணன் .எங்கள் சேவல் பண்ணையின் பக்கத்துக் கூடு.நடுத்தர வயது.அரசு அலுவலகத்தில் பணி.

ஒரு பின்னிரவுக் காட்சிக்குப் பின், நாங்கள் களைத்து புகைப் பிடித்திருந்த வேளையில், அவர்  ஒரு சினேகமான புன்னகையுடன் அருகில் வந்து, "வத்திப் பெட்டி கொடுங்க தம்பி",என்றார், "தம்பி கேசட் கிளியரா இருக்கா ?" என்று திடுக்கிட வைத்தவர், எங்கள் பதிலுக்கு காத்திராமல், "இப்ப அனுபவிக்கிறது தானே?மாட்டிக்காம சந்தோஷமா இருங்க. கார்ட்ஸ் விளையாடுவிங்க தானே? நாளைக்கு ரூமுக்கு வாங்க " என்று  அழைத்து விட்டுச் சென்றார். அடுத்த நாள் கல்லூரி முடித்து , ரூம் அடையும் போது, அவரது ரூமில் நான்கு, ஐந்து பேர் வட்டமாக அமர்நதிருக்க, எல்லோர் கையிலும் பளபளப்பான சீட்டுக்கட்டு சகிதமாக வெடிச்சிரிப்புடன் , உரக்கப் பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அந்த காட்சியே எங்களை ஈர்த்தது.உள் ளே நுழைந்ததும், தம்பி, ஒரு ஆட்டம் தான் போயிருக்கு. அதிக பாயிண்ட 30 தான் . உங்களுக்கு 31 போட்டு , ஜாயின் பண்ணிக்கலாம், ஃஆப் ஸ்கூட் கூட இல்லை எனக் கூறிய மிக அதிக நுண் தகவல்கள்  அன்று பிடிபடாவிட்டாலும், போகப் போக புரிந்து கொண்டோம்.அன்றிலிருந்து , கல்லூரி நேரம் தவிர , முழுவதும் இரவு 1 மணி வரை அங்கு தான் எங்கள் வாழ்க்கை.

அந்த விளையாட்டு மட்டுமல்ல, எங்களை ஈர்த்தது அந்த நடுத்தர வயதினரின் இரு பொருள்,ஒரு மொழி பேச்சுக்கள்,பகடிகள்,ஊர் ஆண்களில் உதவாக்கரை, கேள்விக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் பத்தினித்தனம் என அந்த வயதிற்கான பொழுது போக்கு மட்டுமல்லாது, கண்ணனின் மிக கருத்தான பேச்சுக்கள்,நாடு,கம்யூனிசம்,முதலாளித்துவம்,தாரளமயமாக்கல் என எங்களின் சிந்தனைக்குத்  தீனி போட்டது.எங்களுக்கு கல்லூரி ஆசிரியர்களின் போதனையை விட இது நன்கு புரிந்தது. அவர் மீதான மரியாதை உயர்ந்து கொண்டே சென்றது அந்த சம்பவம் நடைபெறும் வரை.சில நாட்களாக , அவர் ரூம் பூட்டியிருந்தது.உடன் சீட்டு  விளையாடும் சக நண்பர் ஒருவரைப் பார்க்க நேரிட்டது.அவர் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்,ஏதோ குடும்பத் தகராறு , நாளை வந்து விடுவார் என்றார். அடுத்த நாள் அறை திரும்பும் போது, அவர் அறை உள்ளே சத்தம் கேட்கிறது.திறந்திருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.உள்ளே படுத்திருக்கிறார்.ஆனால் கையை,உயர்த்தி,முறுக்கி, மிக கெட்ட வார்த்தைகளில், திட்டிக் கொண்டிருக்கிறார்.சிறு நீர்போன்ற ஒரு  நெடி.  என்னைப் பார்த்ததும், என் குலம் அனைத்தையும் வம்புக்கிழுத்து , மிக கடுமையான சொல்ல நாக் கூசும் வார்த்தைகளில் திட்டி, கதவைத் திறக்கச் சொன்னார். ஆனால் கதவு உட்புறமாகத் தான் தாளிடப்பட்டிருந்தது.நான் எதுவும் சொல்லாமல் ,கோபத்துடன் அறை திரும்பி விட்டேன்.குடித்தவருடன் தகராறு செய்ய விருப்பமின்றி.

நண்பன் பாபு வந்ததும்,நடந்த விஷயங்களைக் கூறினேன்.அவன் மிகுந்த கோபமுற்று, அவரை ஆள் வைத்து அடித்தே ஆக வேண்டும் என்றான்.எனக்கு பெருமையாக இருந்தது,இப்படி ஒரு நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.பல திட்டங்களைத் தீட்டி,இறுதியில் டிவி,டெக் நண்பரின் உதவியுடன்,இரண்டு தட்டு தட்டலாம் என்று முடிவு செய்து தூங்கிப் போனோம்.அடுத்த நாள் காலை , கண்ணன் நினைவுக்கு வர , வெளியே எட்டிப் பார்த்தால் , வழக்கம் போல , குளித்து ,திருநீர் பூண்டு , தூய உடை உடுத்தி வேலைக்கு கிளம்பியிருந்தார்.என்னைப் பார்த்ததும்,எந்த வித தயக்கமும் இன்றி, "தம்பி, சாயங்காலம் வந்துடுங்க, இன்னிக்கு குமுறிடலாம்" என்று எப்போதும் போல் கூறிச் சென்றார்.மாலை  அறை திரும்பு முன், ஓரக்கண்ணால் அவருடைய அறையை நோட்டமிட்டேன்.பழைய கலகலப்புடன் ,நண்பர்கள் புடை சூழ உட்கார்ந்திருந்தார். நம்ம உயிர் நண்பன் பாபு சீட்டு கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தான்.வேகமாக அறை திரும்பி,உடை மாற்றி,முகம் கழுவி, அவர் அறைக்குச் சென்று அமர்ந்தேன்,"எனக்கும் ஒரு கை போடுங்க " என்றேன். 

இன்று அவனிடம் நிச்சயம் இதனை நினைவு படுத்த வேண்டும். நண்பன்டா!!!!