Friday 27 September 2013

என் கடவுள்

நண்பன் போனில் "கிரிவலம் போறேன்,  இன்னைக்கு நைட் , வரியா?" ,  "இல்லடா". புன்சிரிப்புடன் போனை வைத்தேன். எத்தனை வருட தேடல்கள்.சிலருக்கு எளிதாக கிடைத்த கடவுள் எனக்கு சிக்கவே இல்லை. நெடுங்காலமாய்.

பெருமாள் கோவிலில் ,சுடலை மாடனில், புனித மாதா சர்ச்சில், வீட்டில் அம்மாவின் கட்டாயத்தில் ஓரிரு முறை நடந்த ஃபாத்தியாவில்,புத்தர் கோவிலில் அந்த கடவுள் உணர்வு வரவில்லை.எப்படி வரும்.ரத்தத்தில் ஊறிப் போன நாத்திகம். எதையும் கேள்வி கேட்கிறது.

ஏன்ப்பா, நம்ம ஜிம்மாவுக்கு போகலாமா? பசங்க என்னை காபிர் னு சொல்றாங்க. நீ விரும்பினால் போகலாம்.எனக்கு நம்பிக்கை இல்லடா.படி பெரியார்,அண்ணா,குர் ஆன், கீதை,வேதம்,ரஸ்ஸல்,கார்ல் மார்க்ஸ் என அறிமுகப்படுத்திய என் முதல் நாயகன் , வீடு வந்து தொழ அழைக்கும் சக நண்பர்களிடம் கண்ணியமாய், தன் இருப்பில் தெளிவாய் வாதாடும்
இன்று வரை நான் பிரமிக்கும் என் அப்பா.

வளர்ந்த பின் ஓஷோ,ஜேகே புத்தகங்கள், லாகிரி வஸ்துகள் எதுவும் தரவில்லை அந்த கணங்கள்.திருச்செந்தூர்,ராமேஷ்வரம்,உத்தரகோசமங்கை,வேளாங்கண்ணி,சில வெளிநாட்டுப் பயணங்கள் ம்ஹீம்.ஜிம்மா போனேன்.நோன்பு வைத்தேன்.அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை.அல்லா எனக்கு திரை போட்டு விட்டான்.

5 வயதே மூத்த சகோதரி மரணத்தை நெருங்குகிறாள் என்பதை கணிக்க முடிந்த மருத்துவத்திற்கு காப்பாற்ற முடியவில்லை.ஓங்காரம்.என் மரண தொழுகைக்கு முன் தொழு என்றார்கள்.பாவத்தின் சம்பளம் மரணமாம். பால்ய நண்பனிடம் அரற்றினேன்.

 "கதவைப் பூட்டியவன் சாவி இடுக்கு வழி,சற்றே திறந்தவன் சாளரத்தின் வழி. நீ பெருவெளியில் நின்று
கொண்டிருக்கிறாயடா. சட்டங்கள் உனக்கேதுடா"

ஆம், என் கடவுள் மதமற்றவர்.